Wednesday, May 9, 2012

சிகிச்சை பெறாவிட்டால் மரணம் நிச்சயம் ஆண்களை தாக்கும் ”ஹீமோபீலியா” நோய்.

‘எக்ஸ்” குரோமோசோம்களில் ஏற்படும் பாதிப்பு காரணமாக ஆண்கள் ”ஹீமோபீலியா” நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஓராண்டில் 89 பேர் ஹீமோபீலியாவால் பாதிக்கப்பட்டு உள்ளது, மருத்துவத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மரபணுக்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக மனித உடலில் ஏற்படும் பயங்கர நோய்களில் ஒன்றாக, ஹீமோபீலியா (Hemophilia) உருவெடுத்துள்ளது மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  ஹீமோபீலியா பற்றிய விழிப்புணர்வு   இல்லாததன் காரணமாக இந்நோய் தாக்குதலால் இறப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை கூறுகிறது.
இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியது: மரபணுக்களில் ஏற்படும் பாதிப்பு காரணமாக ஹீமோபீலியா நோய் உண்டாகிறது. அதாவது, எக்ஸ் குரோமோசோம் பாதிக்கப்படும்போது இந்த நோய் உருவாகிறது. இந்நோய் ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும் அரிதான நோய். ஏனெனில், ஆண்களின் உடலில் ”எக்ஸ்” மற்றும் ‘ஒய்’ குரோமோசோம்களும், பெண்களுக்கு ”எக்ஸ்” மற்றும் ”எக்ஸ்” குரோம்சோம்களும் உள்ளன. அதனால் ஆண்களிடம் இருக்கும் ஒரே ஒரு ‘எக்ஸ்’ குரோமோசோம் பாதிக்கப்பட்டாலும், அவர்களுக்கு ஹீமோபீலியா நோய் பாதிப்பு ஏற்பட்டு விடும்.
காயம் ஏற்பட்டால் ரத்தக்கசிவு இருந்து கொண்டே இருக்கும். ரத்தம் உறையாது. குறிப்பாக மூட்டு பகுதிகளில் காயம்பட்டால், ரத்தக்கசிவு ஏற்படுவதுடன் உடனடியாக பெரிதாக வீங்கி விடும். இதுதான் ஹீமோபீலியாவின் அறிகுறி. உடலின் மற்ற பகுதிகளில் ரத்தக்கசிவு இருந் தாலும் பிழைக்க வைத்து விட முடியும். ஆனால் மூளை, வயிறு பகுதிகளில் உள்பக் கம் ரத்தக்கசிவு இருந்தால் மரணம் நிச்சயம்.
மரபணுவில் ஏற்படும் பாதிப்பு என்பதால், ஹீமோபிலியா நோய் உண்டாவதில் பெற்றோருக்கு முக்கிய பங்கு உண்டு. ஆண்களுக்கு மட்டுமே இந்த பாதிப்பு என்றாலும், குழந்தை பெற்றுக்கொள்வதன் மூலம் அடுத்த தலைமுறை ஆண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட பெண்கள் காரணமாக உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் மட்டும் ஓராண்டில் 89 பேர், ஹீமோபீலியாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது வாரந்தோறும் சராசரியாக 2 அல்லது 3 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருவது அதிகரித்துள்ளது. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு ஃபேக்டர்,8 மற்றும் ஃபேக்டர்,9 ஊசி போட வேண்டும். ஒரு ஊசியின் விலை ரூ.5000. ஊசி, மருந்துகளின் விலை அதிகம் என்பதால் 95 சதவீத தனியார் மருத்துவமனைகள் ஹீமோபீலியாவுக்கு சிகிச்சை அளிப்பதில்லை.
ஃபேக்டர்,8 மருந்து இல்லாவிட்டால், ரத்தத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ”ஃபிரெஷ் ஃபுரோஸன் பிளாஸ்மா”வை (Fresh Frozen Plasma) பாதிக்கப்பட்டவர் உடலில் செலுத்தலாம். இதுவும் இல்லாவிட்டால், பிளாஸ்மாவில் இருந்து பிரித்தெ டுக்கப்படும் ”கிரியோபிரசிபிடேட்”டை (Cryopreci pitate)ஊசி மூலம் செலுத்த வேண்டும். இந்த நோயை நிரந்தரமாக குணப்படுத்த முடியாது. ரத்தக்கசிவு ஏற்படும்போது தேவையான ஊசி போட்டுக்கொள்வதன் மூலம் உயிர் வாழ முடியும். சிகிச்சை பெறாவிட்டால் உயிர் பிழைக்க முடியாது. இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.

No comments:

Post a Comment